NATIONAL

சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் குடிமக்கள் மலேசியாவில் நுழைய தடை !!!

27 ஜனவரி 2020, 9:05 AM
சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய்  குடிமக்கள் மலேசியாவில் நுழைய தடை !!!

புத்ரா ஜெயா, ஜனவரி 27:

சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழைவதற்கு தடை செய்யும் நடைமுறையை அரசாங்கம் இன்று அறிவித்தது. இதன் மூலம் கொரொனாவைரசின் பரவலைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமைகிறது. தற்காலிகமாக இந்தத் தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்.

பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த உத்தரவு அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் இணையவழி குடிநுழைவு (இ-விசா) மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கப்படும் குடிநுழைவு அனுமதி, மலேசியாவுக்கு வந்தவுடன் வழங்கப்படும் குடிநுழைவு அனுமதி ஆகிய அனைத்து இரக குடிநுழைவு அனுமதிகளும் (விசா) பிரதமர் துறையின் அறிவிப்பின் மூலம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

சுமுகமான நிலைமை திரும்பியதும் இத்தகைய குடிநுழைவு சலுகைகள் மீண்டும் அமுல்படுத்தப்படும். சீன அரசாங்கத்துடன் இணைந்து மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு இந்த உத்தரவின் செயலாக்கத்தை ஒருங்கிணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரிலிருந்துதான் கொரொனாவைரஸ் பரவத் தொடங்கியதாக நம்பப் படுகிறது. அதைத் தொடர்ந்து அந்நகரும், அதன் பக்கத்து நகரான ஹூவாங்காங்கும் முழுவதுமாக மூடப்பட்டு, அந்த நகர்களில் இருந்து மக்கள் வெளியேறுவதும், மற்றவர்கள் அங்கே நுழைவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.