கோலாலம்பூர், ஜூலை 30-
நாட்டின் சுபிட்சத்தைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதன் வழி கருத்து வேற்றுமைக்கு இடமளிக்கக் கூடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுத்தார்.
மக்களின் ஐக்கியமும் சுபிட்சமும் நாட்டின் முக்கிய தூண்களாகும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
"தீயுடன் விளையாடுவது என்பது தன்னைத் தானே மட்டுமே அழித்துக் கொள்வதில்லை. சுற்று வட்டார பகுதிகள் அனைத்தையும் அழித்துவிடும்" என்று இங்கு இஸ்தானா நெகாராவில் 16 ஆவது மாமன்னரின் அரியணை அமரும் விழாவில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
அரசியலச்சமைப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அமல்படுத்தும் மலேசியாவில் மாமன்னர் பரிபாலனம் என்பது வெறும் அடையாளமோ அல்லது சின்னமோ கிடையாது என்றார்.








