பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றத்திற்காக 78 பேர் சமூக சேவை உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டனர்

29 மார்ச் 2026, 8:00 AM
பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றத்திற்காக 78 பேர் சமூக சேவை உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டனர்

ஷா ஆலம், மார்ச் 29: திடக்கழிவு மற்றும் பொதுத் துப்புரவு மேலாண்மை சட்டம் 2007-இன் (சட்டம் 672) கீழ் பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றத்திற்காக 78 பேர் நேற்று சமூக சேவை உத்தரவுக்கு (பி.கே.எம்) உட்படுத்தப்பட்டனர்.

இந்த சமூக சேவை உத்தரவு பெர்லிஸ், கெடா, கூட்டரசுப் பிரதேசம், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய ஆறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டது.

'தூய்மையான மலேசியா, வளமான மக்கள்' என்ற மடாணி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பொது இடங்களில் குப்பைகளை வீசும் பழக்கத்தை ஒழிக்கும் ஒருங்கிணைந்த உத்தியாக இந்த அமலாக்கம் அமைந்துள்ளது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

"சிறிய குப்பைகளை வீசும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது அடைபட்ட வடிகால்கள் போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் உள்ளூர் சமூகத்தின் வசதி பாதிக்கப்பட்டு நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும்.

"சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மக்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை கற்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

"சிகரெட் துண்டுகள், டிஷ்யூக்கள் அல்லது குளிர்பானப் புட்டிகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம். ஏனெனில் இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு நாட்டின் பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்துகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இந்த சமூக சேவை உத்தரவின் கீழ் நடைபாதைகள், பொதுச் சாலைகள், வடிகால் அமைப்புகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கோர் மிங் குறிப்பிட்டார்.

"நிலையான திடக்கழிவு மேலாண்மையைக் கலாச்சாரமாக மாற்றும் மடாணி அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளது.

"இதுவரை, திடக்கழிவு மற்றும் பொதுத் துப்புரவு மேலாண்மைக் கழகம் (SWCorp), சட்டம் 672-இன் கீழ் ஏழு மாநிலங்களில் 1,058 உள்நாட்டினர் மற்றும் 284 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட 1,342 குற்ற அறிவிப்பு நோட்டீஸ்களை (NPK) வழங்கியுள்ளது.

"குப்பையை வீசும் கைகளே அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசி உங்கள் குடும்பத்தின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.