டீசல் விலை உயர்வால் லங்காவி ஃபெரி சேவையில் பாதிப்பு

26 மார்ச் 2026, 9:40 AM
டீசல் விலை உயர்வால் லங்காவி ஃபெரி சேவையில் பாதிப்பு

அலோர் ஸ்டார், மார்ச் 26 - லங்காவிக்கான ஃபெரி சேவையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காகவும், அது முழுமையாக நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும், தினசரி ஐந்து பயணங்களிலிருந்து மூன்று பயணங்களாகக் குறைக்கும் நடவடிக்கை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்துறை டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வால், ஃபெரி
போக்குவரத்துத் துறை முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதால், பயணங்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஃபெரி லைன் வென்ச்சர்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் (பெரி லைன்) நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர் பஹாரின் பஹாரோம் கூறினார்.

100 விழுக்காட்டிற்கும் அதிகமான டீசல் விலை உயர்வு, செயல்பாட்டுச் செலவுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி, லங்காவி ஃபெரி
நிறுவனங்களுக்குச் சுமையாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்த பயணக் குறைப்பிற்காக சிலர் ஃபெரி
நிறுவனங்களைக் குறை கூறுகின்றனர். இது பயணிகளின் போக்குவரத்து வசதிகளைப் பாதிக்கும் என்று கருதுகின்றனர்," என்று அவர் கூறினார்.

"மலேசியாவிலேயே லங்காவிக்கான ஃபெரி
கட்டணம் மிகவும் குறைவான ஒன்றாகும். ஒரு கடல் மைலுக்கு (nautical mile) சுமார் 88 சென் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது தியோமான் தீவு மற்றும் பாங்கோர் தீவுக்கான கட்டணத்தை விட மிகவும் குறைவாகும். அங்கு ஒரு கடல் மைலுக்குச் சுமார் 2 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் மலிவான விலையில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக இந்த குறைந்த கட்டணம் நீண்ட காலமாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், செயல்பாட்டுச் செலவுகள் திடீரென அதிகரித்துள்ள நிலையில், இந்த குறைந்த கட்டணம் வணிகத்தைத் தொடர்வதற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று பஹாரின் கூறினார்.

"இந்த நடவடிக்கை
லங்காவி சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பயண அட்டவணை குறைப்பு, கட்டண சீரமைப்பு அல்லது அரசாங்க ஆதரவு போன்ற நிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், லங்காவி ஃபெரி துறை மிக விரைவில் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது," என்றார் அவர்.

டீசல் விலை 100 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து, ஃபெரி
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில், பெருநாளுக்குப் பிறகு பயண அட்டவணையை மாற்றி அமைக்க ஃபெரி லைன் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.