கூலிம் மார்ச் 14 ; மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய தேசியத்துவக் கழகம் (Akademi Kenegaraan Malaysia) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், வட மாநில இந்திய இளைஞர்களுக்கான சிறப்புத் தலைமைத்துவப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. “KEM GENRLS 2.0” எனும் பெயரில், கெடா கூலிமில் உள்ள தேசியத்துவப் பயிற்சி மையத்தில் மூன்று நாட்கள் இந்த முகாம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதில் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி வளாகங்கள் மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 94 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முக்கிய விருந்தினரின் உரை
இந் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி உயர் திரு சண்முகம் மூக்கன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில், "நாட்டின் முக்கிய செயல் பாட்டு குறிகாட்டிகள் (KPI) வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மக்களின் சுபிட்சக் குறியீடு (KHI) இன்னும் முழுமையான இலக்கை எட்டவில்லை. குறைகளை மட்டுமே பார்க்காமல், முன்னேற்றத்திற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானவை; அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி இந்தியச் சமூகம் மேலோங்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
தலைமைத்துவ சவால்
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் சேவைச் செம்மல் தனேஷ் பாசில் பேசுகையில், இந்திய இளைஞர்களைத் தேசிய அளவிலான இத்தகைய முகாம்களில் ஒருங்கிணைப்பது ஒரு சவாலான காரியம் என்றும், அதை ஒரு நல்வாய்ப்பாக கருதி இம் முகாமைத் தேசியத்துவக் கழகத்துடன் இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு 720 இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், இந்திய இளைஞர்கள் 930 பேருக்கு இவ்வாண்டு இக்கழகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சிறப்பான ஒருங்கிணைப்பு
இத்திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பு ஏற்றிருந்த திரு பிரவின் ராமகிருஷ்ணன் அவர்கள், முகாமின் ஒவ்வொரு அங்கத்தையும் நுணுக்கமாக திட்டமிட்டு வழி நடத்தினார். இளைஞர்களின் ஆளுமை திறனை மேம் படுத்துவதையும், நாட்டின் மீதான பற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முகாம், அவரது தலைமையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.





