ஈப்போ, மார்ச் 5: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (PLUS) 284.2 கிலோமீட்டரில், வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
மாலை 6:33 மணிக்கு இது குறித்த தகவல் கிடைத்தவுடன், சிம்பாங் பூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விபத்து நடந்த இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார். வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மரத்தில் மோதி 80 விழுக்காடு தீயில் கருகியிருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய நபரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவர் தீயில் கருகி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் சபாரோட்ஸி நோர் கூறினார்.








