ஷா ஆலாம், மார்ச் 4- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷா ஆலம், செக்ஷன் U16 பகுதியில் இரண்டு பூனைகளை பிளாஸ்டிக் பையில் போட்டு கொடூரமாக உதைத்து சித்திரவதை செய்த 39 வயது மெக்கானிக் டேனியல் ஹக்கிம் அப்துல்லாவிற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
விலங்கு நலச் சட்டம் 2015-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நோர் ஹஸ்னியா அப் ரசாக் அவருக்கு 60,000 ரிங்கிட் அபராதம் விதித்தார்.
இருப்பினும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தத் தவறியதால், அதற்குப் பதிலாக அவர் 22 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலான அந்த காணொளியில், அவர் ஒரு கருப்பு மற்றும் ஒரு வெள்ளை நிறப் பூனையை மிகக் கொடூரமாகத் தாக்கியது உறுதியானது.
இந்தத் தாக்குதலில் வெள்ளை நிறப் பூனை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கால்நடை மருத்துவச் சேவைத் துறையின் (DVS) புகாரைத் தொடர்ந்து காவல்துறை அந்த நபரை கைது செய்தது.
விலங்குகள் மீதான வன்கொடுமையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.








