ஷா ஆலாம்: கடந்த வாரம் செக்ஷன் 7 பள்ளிவாசலில் உண்டியல் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று நபர்களுக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆறு மாத சிறைத்தண்டனையும், தலா ரிம4,000 அபராதமும் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கார் கழுவும் மைய ஊழியரான கே. தினேசுரன் (26), லோரி உதவியாளர் ஆர். நிஷன்ராஜ் (22), மற்றும் தொழிற்சாலை ஊழியர் ஆர். டனேஷ் (27) ஆகியோர் என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் முஹம்மது ஷாபிக் சுலைமான், சிறைத் தண்டனையை இன்றிலிருந்து தொடங்க உத்தரவிட்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர்கள் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில், ரிம2,000 மதிப்புள்ள துருப்பிடிக்காத எஃகு உண்டியலை மூவரும் கூட்டாகத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டம் பிரிவு 380-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதே வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயதுடைய மற்றொரு குற்றவாளிக்கான தண்டனை, சமூகநலத் துறையின் (JKM) நன்னடத்தை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில், அந்த இளையரை ரிம1,500 ஜாமீனில் ஒரு நபர் உத்திரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அவருக்கான வழக்கு விசாரணை தனிப்பட்ட முறையில் நடைபெற்றது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஸ்விந்தர் சிங் மற்றும் அஷ்ருல் ஹைக்கல் ஆஜராகினர். அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முவாஸ் கவாரிஸ்மி அஸ்ஃபார் வழக்கை நடத்தினார்.
முன்னதாக, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார், இந்த வழக்கில் ஆத்திரமூட்டும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், பணத் தேவைக்காகவே சந்தேக நபர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாநில காவல்துறைக்கு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்டியல் திருடிய குற்றத்திற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நபர்களுக்கு, தலா ரிம 4,000 அபராதமும் ஆறு மாத சிறை விதித்தது.
4 மார்ச் 2026, 3:15 AM
தொடர்புடைய செய்திகள்
national
சமூக ஊடகங்களில் பதிவிடும் முன் சிந்திப்பீர்; மலேசியர்களுக்குக் காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுரை
Evelyn Moses
3 மார்ச் 2026

selangor
கோலா லங்காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலமாகக் கண்டெடுப்பு; இருவர் கைது
Pakiya
17 பிப்ரவரி 2026

selangor
கிள்ளான் துறைமுகத்தில் மின்னணுக் கழிவுகள் அடங்கிய 9 கொள்கலன்கள் பறிமுதல்
Mavitthran
12 பிப்ரவரி 2026
national
தேசியப் பாதுகாப்பு தொழிற்துறை கொள்கை:வெளிப்படையான கொள்முதல் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்ய பிரதமர் அன்வார் உறுதி
Mavitthran
21 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




