கோலாலம்பூர், மார்ச் 3- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு கல்வி பயிலும் 1,936 மலேசிய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய உயர்கல்வி அமைச்சும் வெளியுறவு அமைச்சும் இணைந்து அங்குள்ள நிலைமையை அவ்வப்போது அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், இதுவரை எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படவில்லை என்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரிஅப்துல் காதிர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அதிகாரப்பூர்வப் பதிவுகளின்படி, ஜோர்டானில் 1,762 மாணவர்களும், சவுதி அரேபியாவில் 135 மாணவர்களும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
குவைத் நாட்டில் ஒன்பது மாணவர்களும், ஈரானில் ஆறு மாணவர்களும் மற்றும் கத்தாரில் மூன்று மாணவர்களும் தங்கி தங்களின் மேல்நிலைக் கல்வியைத் தொடர்வதாக அமைச்சுப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தற்போதுவரை மாணவர்கள் தரப்பிலிருந்து கவலைப்படும்படியான புகார்கள் ஏதும் வரவில்லை என்பதோடு, தாயகம் திரும்புவதற்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் மற்றும் ஜோர்டானைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'எடுகேஷன் மலேசியா' அலுவலகங்கள், அரபு நாடுகளில் உள்ள நமது மாணவர்களின் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் சிறப்பாகக் கண்காணித்து வருகின்றன.
பச்சோக்கில் உள்ள கிளந்தான் மலேசியா பல்கலைக்கழகத்தில் (UMK) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போது, அமைச்சர் ஜாம்ப்ரி செய்தியாளர்களிடம் இந்தப் பாதுகாப்பு நிலவரங்களை விரிவாக விளக்கினார்.






