ஷா ஆலம், மார்ச் 2: இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் 2024-ஆம் ஆண்டு வெளியான பழைய காணொளி ஒன்று மீண்டும் பகிரப்படுவதைத் தொடர்பாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவரால் அந்நாட்டில் செய்யப்பட்டதாக நம்பப்படும் திருக்குர்ஆனை மிதிக்கும் செயல் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இக்காணொளி மீண்டும் பகிரப்படுவது பொதுமக்களிடையே பெரும் கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஆணையத்திற்குப் புகார்கள் வந்துள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, இதில் தொடர்புடைய நபர் ஒரு சிங்கப்பூர் குடிமகன் என்பதும் இச்சம்பவம் அங்குதான் நடந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மலேசியாவில் இந்தக் காணொளி பரவுவதைத் தடுக்கவும் அதனை முடக்கவும் த்ரெட்ஸ் (Threads), முகநூல் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களுடன் ஆணையம் இணைந்து செயல்பட்டு வருகிறது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் மற்றும் சமூக அமைதியைக் குலைக்கும் இத்தகைய காணொளிகளைப் பரப்புவது பொறுப்பற்றச் செயல் என்றும், இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. இத்தகைய உள்ளடக்கங்களைப் பதிவேற்றவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதனை aduan.mcmc.gov.my என்ற இணையப்பக்கம் வழியாகவோ அல்லது போலீசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








