கோலாலம்பூர், பிப் 27- மலேசியக் காற்பந்துச் சங்கம் (FAM) மற்றும் ஏழு தேசிய அணி வீரர்கள் மீது அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) விதித்த தண்டனை தொடர்பான மேல்முறையீட்டின் தீர்ப்புக்காக உள்ளூர் காற்பந்து ரசிகர்கள் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.
விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் (CAS) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, அதிகாலையில் நடந்த விசாரணைக்குப் பிறகும் தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்று பெர்னாமா மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது.
இது தொடர்பான அறிக்கை ஒன்று இன்று வெளியிடப்படும் என்று FAM தலைமைச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான் பெர்னாமாவிடம் சுருக்கமாகக் கூறினார்.
கடந்த டிசம்பரில், ஃபிஃபாவின் தண்டனைக்கு எதிராக FAM மற்றும் ஏழு ஹரிமாவ் மலாயா மரபுவழி வீரர்களின் சார்பாக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்யப்பட்டதை FAM உறுதிப்படுத்தியது.
அதற்கு முன்னர், செப்டம்பர் மாதம், ஃபிஃபாவின் ஒழுங்குமுறை விதிகளின் பிரிவு 22-ஐ (போலி ஆவணங்கள்) மீறியதாக FAM மற்றும் ஏழு வீரர்களான கேப்ரியல் ஃபெலிப்பே அரோச்சா, ஃபகுண்டோ கார்செஸ், ரொட்ரிகோ ஹோல்காடோ, இமானோல் மன்சுகா, ஜோவோ ஃபிகுரெய்டோ, ஜொன் இராசபால் மற்றும் ஹெக்டர் ஹெவல் ஆகியோர் குற்றவாளிகள் என ஃபிஃபா அறிவித்தது.
கடந்த ஜூன் மாதம் இங்கு நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றின் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் மலேசியா 4-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமைத் தோற்கடித்தபோது, சம்பந்தப்பட்ட வீரர்களின் தகுதியை உறுதிப்படுத்த FAM போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, FAM-க்கு 350,000 சுவிஸ் ஃப்ராங்க் (சுமார் RM1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒவ்வொரு வீரருக்கும் 2,000 சுவிஸ் ஃப்ராங்க் (சுமார் RM11,000) அபராதமும், 12 மாதங்களுக்குக் காற்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடையும் விதிக்கப்பட்டது.
தண்டனையைக் குறைப்பதற்கான நம்பிக்கை தகர்ந்தது. நவம்பர் 3-ஆம் தேதி, ஃபிஃபாவின் மேல்முறையீட்டுக் குழு, FAM மற்றும் அனைத்து வீரர்களின் மேல்முறையீட்டையும் நிராகரித்தது.
இருப்பினும், ஜனவரி 27 அன்று, சம்பந்தப்பட்ட வீரர்கள் சமர்ப்பித்த தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விண்ணப்பத்தை CAS அனுமதித்ததாக FAM தெரிவித்தது. இதன்மூலம், மேல்முறையீட்டின் இறுதி முடிவு வெளியாகும் வரை அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடரவும், காற்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டனர்.







