ஷா ஆலம், பிப். 27 – சமீபத்தில் கோல லங்காட் பகுதியில் உள்ள புக்கிட் சங்காங் மற்றும் கம்போங் லோம்போங் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கைகள் ட்ரோன்களின் உதவியுடன் கண்டறியப்பட்டதாகக் கோல லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) தெரிவித்துள்ளது.
ஜனவரி 8 மற்றும் 12 ஆகிய தேதிகளில், எம்பிகேஎல் துணைச் சட்டம் (கழிவுகளை சேகரித்தல் மற்றும் அகற்றுதல்) 2007 இன் கீழ், துணைச் சட்டம் 4ன் அடிப்படையில் இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
“தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மூலம் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதக் கழிவுகளைக் கொட்டும் செயல்களை எதிர்த்து போராடும் முயற்சிகளை எம்பிகேஎல் தொடர்ந்து தீவிரப்படுத்தும்.
“விதிமுறைகளை மீறும் எந்தத் தரப்பினருடனும் எம்பிகேஎல் சமரசம் செய்யாது. அவ்வப்போது அமலாக்க நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்,” என்று வலியுறுத்தப்பட்டது.
சட்டவிரோதமாகக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல் அல்லது புகார்கள் உள்ள பொதுமக்கள் பின்வரும் வழிகளின் மூலம் புகாரளிக்கலாம்:
• அதிகாரப்பூர்வப் புகார் இணையதளம்: mpkl.spab.gov.my
• தொடர்பு எண்: 012-300 4130









