ஷா ஆலம், பிப் 26: புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) தளபதியின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர், சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது இத்தகவலை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. நேற்று அதிகாலை 5.40 மணியளவில், சிரேஷ்ட உதவி ஆணையர் முகமட் நசருடின் எம் நசிர் சுபு தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் ஓட்டிச் சென்ற புரோட்டான் X70 ரக காரை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
கடந்த 2025 ஜனவரி மாதம் இப்பொறுப்பில் அமர்த்தப்பட்ட முகமட் நசருடின், இதற்கு முன்பு ஈஸ்கோம் (ESSCOM) சிறப்புப் படைப் பிரிவின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லைப் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அமலாக்கப் பிரிவினரை அச்சுறுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.








