ஷா ஆலம், பிப் 24: இந்த ஆண்டு 38,400 ஜோம் ஷோப்பிங் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி வவுச்சர்கள் தகுதியான பெறுநர்களுக்கு விநியோகிக்கப்படும். இதற்கு RM7.68 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வவுச்சர் விநியோகம் சிலாங்கூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. மக்கள் ஹரி ராயா கொண்டாட்டத்திற்குத் தயாராக உதவும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது என மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
வவுச்சர்களின் பயன்பாட்டு காலம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. “ஜோம் ஷாப்பிங் ஹரி ராயா திட்டத்தை சீராக நடத்துவதற்கும் மக்களின் நலனுக்காக செயல்படுத்துவதற்கும் மாநில அரசு கண்காணிப்பை மேற்கொள்கிறது,” என அவர் கூறினார்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்த சூப்பர் மார்க்கெட்டுகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் NSK Grocer, Lotus's Malaysia, MYDIN, Giant Malaysia, Best Fresh Mart, Econsave, TF Value-Mart, Grand Union Supermarket, NSK Trading மற்றும் Sri Ternak Food Mart ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.
திட்டத்தின் செயல்பாடு வெளிப்படையாகவும், இலக்கு குழுவிற்குப் பயனளிப்பதாகவும், ஹரி ராயாவுக்கு முன் மக்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் இருப்பது முக்கியம் என்று அவர் விளக்கினார்.
மேலும், விநியோகக் காலம் முழுவதும் பற்றாக்குறை பிரச்சனை ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். “அடிப்படை உணவுப் பொருட்கள் – அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, மாவு, கோழி மற்றும் பிற தேவைகள் போதுமான அளவில் வழங்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.
RM3,000க்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் அடிப்படைத் தேவைகளை வாங்க உதவுவதற்காக, ஒரு நபருக்கு RM200 மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பெராயான் வவுச்சர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு, மாநில அரசு RM18.48 மில்லியனை இந்த திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட RM2 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரி ராயா, சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி கொண்டாடும் 92,400 பெறுநர்கள் பயனடையலாம்.








