கோத்தா பாரு, பிப் 24- உயர்தரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாசி லெமாக், கேக் மற்றும் புட்டிங் போன்றவை வழக்கமாக அதிக விலையில் விற்கப்படும். ஆனால், இங்குள்ள பிரிங்காட் ரமலான் சந்தையில், இந்த உணவுகள் ஒரு ரிங்கிட் முதல் RM1.50 வரையிலான குறைந்த விலையில் விற்கப்படுவது, ஒவ்வொரு மாலையும் வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
46 வயதான நஸ்ருலாமான் முகமது என்பவரால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரமலான் மாதம் முழுவதும் நாசி லெமாக்கை ஒரு ரிங்கிட்டிற்கும், கேக் மற்றும் புட்டிங்கை RM1.50க்கும் விற்பனை செய்வதன் மூலம், கிராம மக்களும் குறைந்த வருமானம் பெறுவோரும் தரமான உணவுகளை மலிவு விலையில் வாங்கி மகிழ முடியும் என்று அவர் கூறினார்.
இது ரமலான் மாதத்தில் தர்மம் செய்து ஆசீர்வாதத்தைப் பெறும் தனது நோக்கத்தின் ஒரு பகுதி என பெர்னாமாவிடம் பேசிய நஸ்ருலாமான் குறிப்பிட்டார்.
"முன்னதாக, நான் தயாரித்த கேக் மற்றும் புட்டிங் வகைகள் 5 ரிங்கிட் மற்றும் அதற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டன," என்று கூறிய அவர், மிகவும் பிரபலமான 'டூட்டி ஃப்ரூட்டி' புட்டிங்குடன், 'ரெட் வெல்வெட்', 'ப்ளூபெர்ரி வெண்ணிலா' மற்றும் 'ஓரியோ' போன்ற பல சீஸ் கேக் வகைகளையும் விற்பதாகத் தெரிவித்தார்.
மெலோர், கம்போங் பாக் படோலைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், கேக் மற்றும் பேஸ்ட்ரி தயாரிப்பதில் திறமையான தனது மனைவியுடன் கலந்துரையாடியதன் விளைவாகவே இந்த யோசனை உருவானதாகக் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்யத் தொடங்கியதாகவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதை நிறுத்திவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கியதாகவும் நஸ்ருலாமான் கூறினார்.
"இந்த சந்தையில் நான் நாசி லெமாக் விற்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு கேக், பலகாரங்கள் மற்றும் புட்டிங் வகைகளில்தான் அதிக கவனம் செலுத்தினேன்," என்றார் அவர்.
அவர் தினமும் சுமார் 70 முதல் 100 பொட்டலங்கள் நாசி லெமாக் மற்றும் 200 முதல் 300 பாத்திரங்களில் பலவகை சுவைகளில் கேக் மற்றும் புட்டிங் வகைகளைத் தயாரிக்கிறார். வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் அமோக வரவேற்பால், ஒவ்வொரு நாளும் இரவு 7 மணியளவில் அனைத்து உணவுகளும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
"அதிகமானோர் வாங்க வேண்டும் என்பதற்காக உணவின் அளவு சிறியதாக வைக்கப்பட்டுள்ளது. குறைவாக இருந்தாலும், அனைவரும் சுவைத்துப் பார்க்க வேண்டும். லாபம் பெரியதாக இல்லாவிட்டாலும், தர்மத்தின் பலன் எங்களுக்குக் கிடைக்கிறது. கிராம மக்கள் விலை பற்றி கவலைப்படாமல், உயர்தரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சுவைக்க வேண்டும் என்பதே முக்கியம்," என்று அவர் மேலும் கூறினார்.
ரமலான் சந்தையில் தினசரி விற்பனை செய்வதோடு, மெலோர், கம்போங் டெகாயோங்கில் உள்ள ஒரு தஃபிஸ் மையத்திலிருந்தும் நோன்பு துறப்பு உணவுக்கான முன்பதிவுகளை அவர் பெற்று வருகிறார்.






