ஷா ஆலம், பிப் 23- ஷா ஆலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இணைக்கும் இலகு இரயில் போக்குவரத்து 3 (LRT3) சேவை, அனைத்து தொழில்நுட்ப சோதனைகளும் முடிவடைந்த பிறகு வரும் ஜூன் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் மொத்தம் உள்ள 22 ரயில் பெட்டிகளில் 14 ரயில்கள் எவ்வித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை (FFR) முடித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 8 ரயில்கள் 22 நாட்களுக்கான சோதனை ஓட்டத்தில் உள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD) தனது இறுதிச் சோதனைகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் புதிய இலக்காக நடப்பு மார்ச் மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில், ஜூன் மாதத்திற்கு முன்பாகவே சேவையைத் தொடங்க பிரசரானா நிறுவனம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.






