ஜோர்ஜ்டவுன், பிப். 23 — நேற்றிரவு பினாங்கு, ஜாலான் பாயா தெருபோங் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தனது காருக்குள் 38 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பூட்டப்பட்ட பெரோடுவா மைவி காரைத் திறக்க காவல்துறையினருக்கு உதவுவதற்காக இரவு 7.48 மணியளவில் தனது குழுவிற்கு அழைப்பு வந்ததாக பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தலைமை அதிகாரி கைருல் அனுவார் முகமட் ரஹீம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, காருக்குள் அப்பெண்ணுக்குச் சொந்தமான ஏராளமான பொருட்கள் இருந்ததாக அவர் கூறினார். துணிமணிகள், தலைகாணி, அட்டைப் பெட்டி, பை மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதனால் கார் கதவைத் திறப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் நுழைந்தபோது, அப்பெண் சடலமாகக் கிடந்தார் என தெரிவிக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்த அம்சமும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், உயிரிழந்தவர் சற்று மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.







