சீனப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்களைத் தடுப்பதில் காவல்துறை முழு கவனம் செலுத்துகிறது. வீடுகளை உடைத்து திருடும் சம்பவங்களைத் தடுப்பதில் காவல்துறை முழு கவனம் செலுத்துகிறது.
மாநிலம் தழுவிய குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் 3,100 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி காஹார் தெரிவித்தார்.
சினார் ஹரியான் செய்திக்கு இணங்க, பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தங்கள் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குடியிருப்புப் பகுதிகளில் காவல்துறையின் ரோந்துப் பணிகள் மற்றும் பிரசன்னம் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“பண்டிகைக் காலங்களில் அடிக்கடி நிகழும் குற்றங்களில் வீடுகளில் புகுந்து கலவாடுவதும் ஒன்று. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் ரோந்துப் பணிகளைத் தீவிரப் படுத்துவோம்.
"சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். அப்போதுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்," என்று அவர் கூறினார்.
இன்று காஜாங் எம்ஆர்டி அரங்கத்தில் நடைபெற்ற 'Walkabout Langkah Selamat Santuni Komuniti Kajang' நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தன்னார்வ ஸ்மார்ட்போன் ரோந்து (Volunteer Smartphone Patrol - VSP) செயலி, அருகிலுள்ள காவல் நிலையத்தில் படிவத்தை நிரப்புதல் அல்லது மாவட்டத் தலைமையகத்தின் நடவடிக்கையறைக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்த வசதிகள், மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், மன நிம்மதியுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்ப உதவும்," என்றார்.
வீடுகளையும் வாகனங்களையும் பூட்டிவைப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் பகிராமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஷசெலி அறிவுறுத்தினார்.
பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, காவல்துறைக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.







