ஷா ஆலம், 15 ஜனவரி: பந்திங், கம்போங் ஓலக் லெம்பிட், ஜாலான் 5 வின் தொழில்துறை பகுதியில் நேற்று இரவு நான்கு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய நிலையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தீயை முழுமையாக அணைத்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது இந்தச் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
"மீட்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மூன்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை கண்டெடுத்தனர். இவை அனைத்தும் தொழிற்சாலை 'A'-வில் கண்டெடுக்கப்பட்டன," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இரவு 10.03 மணிக்குத் தங்களுக்குப் புகார் வந்ததாகவும், உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் 100 விழுக்காடு முற்றிலும் எரிந்து சாம்பலாகின.











