கோலாலம்பூர், ஜன 7- தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் ஆகியவற்றுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற தேசிய முன்னணியின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதில், கொள்கை ரீதியான தலைமைத்துவத்தையும் உறுதியையும் வெளிப்படுத்திய துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி அவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்த முடிவு சரியானதும், தொலைநோக்குடையதும், நாட்டின் நலனை மையமாகக் கொண்டதுமாகும். தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் என்ற '' படகை நடுகடலில் ஆட்டக் கூடாது". கொள்கைகளின் தொடர்ச்சி, பொருளாதார மீட்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அரசியல் ஸ்திரத்தன்மை ஒரு முக்கிய அடிப்படையாகும் என்று அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோரின் வலுவான தலைமைத்துவக் கூட்டணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இவர்கள் இணக்கம், முதிர்ச்சி மற்றும் நாட்டின் நிர்வாகத்தை திறம்பட ஒருங்கிணைக்கும் திறனை நிரூபித்துள்ளனர். இந்த தலைமைத்துவக் கலவையானது நல்லாட்சியை வலுப்படுத்துகிறது, மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை விரைவு படுத்துகிறது மற்றும் மக்களின் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
முன்பு ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மையால் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை மக்கள் மீண்டும் அனுபவிக்கக் கூடாது.
எனவே, ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் மீட்சி மற்றும் செழிப்பில் கவனம் செலுத்துவது ஆகியவை ஒரு பொதுவான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.








