கோலாலம்பூர், ஜனவரி 2 – பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம், 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரயில் மற்றும் பேருந்து சேவைகளில் 1.54 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைப் பதிவு செய்து சாதனைச் செய்துள்ளது.
கடந்த 2025 டிசம்பர் 31ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 0.76 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது பிரசரானா நிறுவப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த சாதனையாகும்.
இந்த வெற்றிக்கு, கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள ரேபிட் கேஎல்லின் சுமார் 3,000 முன்னணி ஊழியர்களின் திறமையான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை ஆகியவை முக்கியக் காரணம் என்று பிரசரானா குழுமத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அமீர் ஹம்டான் தெரிவித்தார்.
"பதிவு செய்யப்பட்ட 1.29 மில்லியன் ரயில் பயணிகளில், காஜாங் வழித்தடம் 396,141 பயணிகளுடன் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து கிலானா ஜெயா வழித்தடம் (321,381), அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடம் (246,885), புத்ராஜெயா வழித்தடம் (234,158) மற்றும் மோனோரெயில் சேவை (90,748) ஆகியவை இருந்தன.
"ரேபிட் ஒன்-டிமாண்ட் (ROD) உட்பட பேருந்து சேவைப் பிரிவில், 251,737 பயணிகள் பயணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் ரேபிட் கேஎல் (183,944 பயணிகள்), ரேபிட் பினாங்கு (48,002) மற்றும் பிஆர்டி சன்வே (19,791) ஆகியவை அடங்கும்," என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
களத்தில் உள்ள செயல்பாட்டு ஒருங்கிணைப்பின் செயல்திறன், பயணிகள் அதிகரித்த போதிலும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் சீராகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் செயல்பட உதவியது என்றும் அவர் மேலும் கூறினார்.
மலேசிய அரச காவல் படை மற்றும் கொண்டாட்ட மையப் பகுதி நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு, நகர மையத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், போக்குவரத்து சீராகக் கட்டுப்படுத்தப்படுவதையும், பேருந்து சேவைகள் அட்டவணைப்படி செயல்படுவதையும் உறுதி செய்ய உதவியது என்றும் அவர் தெரிவித்தார்.








