ஷா ஆலம், ஜன 19: ஷா ஆலம் விளையாட்டு அரங்கின் (Kompleks Sukan Shah Alam – KSSA) மறுவளர்ச்சி நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்து வருகிறது. தற்போது, அது 6.61 சதவீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் தற்போது நில வேலைகள் மற்றும் கட்டுமானத்திற்கான தளத் ஏற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பின்னர் அடுத்த கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
“அனைத்து பணிகளும் சுற்றியுள்ள சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், கட்டுக்கோப்பான கண்காணிப்புடன் கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
“இந்தத் திட்டம் 2029ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவு பெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறுமையுடனும் தொடர்ச்சியான ஆதரவுடனும் துணை நிற்கும் உள்ளூர் மக்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி,” என KSSA தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இத்திட்டத்தில் சிலாங்கூர் FC அணிக்கான புதிய மைதானம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொழுதுபோக்கு பகுதிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தின் இருக்கை கொள்ளளவு சுமார் 30,000 முதல் 40,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தி ரெட் ஜெயன்ட்ஸ் (The Red Giants) அணியின் அதிகாரப்பூர்வ மைதானமாக இருந்த இந்த சிறப்புமிக்க அரங்கம், மறுவளர்ச்சிக்கு வழிவகுப்பதற்காகக் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் இடிக்கப்பட்டது.
இந்த புதிய விளையாட்டு அரங்கம், ஹோட்டல் மற்றும் நேரடியாக இணைக்கப்படும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


