தகவல் தொடர்பு அமைச்சகம், அரசாங்க செய்தி பரப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது

17 ஜனவரி 2026, 6:49 AM
தகவல் தொடர்பு அமைச்சகம், அரசாங்க செய்தி பரப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது

சைபர் ஜெயா, ஜனவரி 16 — அரசாங்கக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும், துல்லியமாகவும், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் பரப்பப்படுவதை உறுதி செய்ய, தகவல் தொடர்பு அமைச்சகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், இந்த நோக்கத்திற்காக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களிலும் உள்ள தகவல் அலுவலர்கள், பொது உறவு அலுவலர்கள் (பிஆர்ஓ) மற்றும் கார்ப்பரேட் தகவல் தொடர்பு பிரிவுகள் (யூகேகே) ஆகியோரை ஈடுபடுத்தி, அரசாங்க தகவல் தொடர்பு பொறியியலின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

"சில சமயங்களில், நம்மிடம் ஒரு பொருள் அல்லது சேவை இருந்தாலும், இலக்கு குழு அதன் இருப்பைப் பற்றி அறியாதிருக்கும் போது, அங்குதான் தகவல் தொடர்பு சிக்கல் எழுகிறது," என்று அவர், இங்கு தகவல் துறை (ஜாபென்) ஊழியர்களுக்கு உரையாற்றிய பின் பெர்னாமா மற்றும் ஆர்டிஎம்-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மடாணி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி, இலக்கு நோக்கிய திட்டங்களுக்கு தகவல் பரப்புதலில் தெளிவு மிகவும் முக்கியமானது என்று கூறினார். இதில் நிதி அமைச்சகத்தின் ஸும்பங்கன் துனாய் ரஹ்மா (எஸ்டிஆர்), ஸும்பங்கன் அசாஸ் ரஹ்மா (சாரா), மைசாலாம் மற்றும் பள்ளி உதவி போன்ற முன் முயற்சிகளும் அடங்கும்.

இந்த நோக்கத்திற்காகவும், உள்ளூர் சூழலுக்கு ஏற்ற எளிமையான, அணுகக்கூடிய மொழி பயன்பாடு முக்கியமானது என்றார் அவர்.

"அவர்களுக்கு (ஜாபெனில்) நான் அளித்த அறிவுறுத்தல் என்னவென்றால், பயன்படுத்தப் படும் மொழி நடைமுறை நிலையில்  உள்ளூர் மக்களுக்கு விளங்க கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, பெர்லிசில், அதை வெளிப்படுத்துவதற்கு வெவ்வேறு வாக்கியங்கள் மற்றும் அணுகுமுறைகள் தேவைப்படலாம்.

"இதேபோன்று சீன சமூகத்திற்கும், இந்திய சமூகத்திற்கும் மற்றும் சில இன குழுக்களுக்கும் பொருந்தும் — பயன்படுத்தப்படும் மொழி துல்லியமாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும், வெறும் அலுவலக மொழி அல்லது 'புத்ராஜெயா மொழி' அல்ல," என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்ஸுல் அஸ்ரி அபு பக்கார், அரசாங்கத் தகவல் தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும், இதனால் மக்கள் முன் முயற்சிகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று ஒரு உரையில் கூறினார்.

மற்றொரு வளர்ச்சியாக, ஃபஹ்மி, துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் (ஐபிபிடிஆர்) ஒரு முக்கிய பயிற்சி மையமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். இது முக்கிய அரசாங்க தகவல் தொடர்பாளர்களை உருவாக்கி, தகவல்களை மிகவும் திறம்பட பரப்பவும், தற்போதைய தேவைகளுக்கு பதிலளிக்கவும் உதவும்.

"இது குறிப்பாக ஜாபென் அலுவலர்கள், பிஆர்ஓக்கள் மற்றும் யூகேகேக்களுக்கானது. இதனால் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் முன்பு எழுப்பிய (அரசாங்க தகவல் தொடர்பு சிக்கல்கள் குறித்த) பிரச்சினைகளை விரைவாகவும் முழுமையாகவும் நிர்வகிக்க முடியும்," என்றார் அவர்.

தனது உரையில், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பேஸ்புக், டிக்டாக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை உட்கொள்ளும் மிகப் பெரிய குழுவாக அடையாளம் காணப்பட்டது ஒரு ஆய்வு கண்டறிந்ததாக ஃபஹ்மி தெரிவித்தார்.

"இந்தக் குழுவினர் வாக்காளர்களில் பாதிக்கும் மேலாக இருப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் முக்கிய பயனர்களாகவும் உள்ளனர்."இது தொடர்பாக, அரசாங்கம் மற்றும் தகவல் பொறியமைப்பு மேம்பட்ட முறையில் தயாராக இருக்க வேண்டும் என்பதையும், பழைய அணுகுமுறைகளை நம்பி அல்லது உள்ளடக்கத்தை மீண்டும் பகிர்வதில் மட்டும் நிற்காமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்," என்று அவர் முடித்தார்.

குறிப்பாக படிக்க விருப்பம் குறைவான சமூகங்களுக்கு செய்திகளை எளிதாக வழங்குவதற்கான ஒரு திறன்மிக்க முறையாக வாட்ஸ்அப் ஆடியோ அம்சத்தின் பயன்பாடும் பரிந்துரைக்கப் பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.