ஷா ஆலம், ஜனவரி 9- புக்கிட் பண்டாராயா, பிரிவு யூ பதினொன்று பகுதியில் அமைந்துள்ள மழைநீர் தேக்கக் குளத்தில், கடந்த புதன்கிழமை பெண் முதியவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காலை பதினொன்று முப்பது மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஷா ஆலம் மாவட்ட காவல் உதவி ஆணையர் ரம்சே எம்போல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஷா ஆலம் மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில காவல் தலைமையகத்தின் தடயவியல் ஆய்வு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் சடலத்தை மீட்டனர்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் என்று தெரியவந்தது. அவரது உடல் ஷா ஆலம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வகத்தின் முழுமையான அறிக்கை இன்னும் பெறப்படவில்லை.
இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள், விசாரணை அதிகாரியை 013-400 3355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


