ஷா ஆலம், டிச 30 - மலேசிய கல்வி அமைச்சகத்தின் (KPM) கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பள்ளி மாணவர்கள், எதிர்வரும் ஆண்டிலிருந்து கழுத்துப்பட்டை (tali leher) அணிவது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, கடந்த டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கல்வி இயக்குநர் டாக்டர் முகமட் ஆசாம் அமாட் கையெழுத்திட்டுள்ளார். இந்த முடிவு, கடந்த டிசம்பர் 8 அன்று நடைபெற்ற KPM சிறப்பு தொழில்முறை கூட்டம் 2025இல் எடுக்கப்பட்டது.
எனினும், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் இணக்கமாக ஒப்புக் கொண்டால், கழுத்துப்பட்டை அணிவது இன்னும் அனுமதிக்கப்படுவதாக KPM தெரிவித்துள்ளது.
மேலும், கழுத்துப்பட்டை அணிவது தொடர்பாக மாணவர்களுக்கு எந்தவித கட்டாயமும் அல்லது அழுத்தமும் கொடுக்க எந்தத் தரப்புக்கும் அனுமதி இல்லை என்றும் KPM வலியுறுத்தியுள்ளது.
“
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளி உபகரணங்களை தயார் செய்ய வேண்டிய அவசியத்தை KPM எப்போதும் கருத்தில் கொண்டுள்ளது>
“அந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக, மாணவர்களின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று KPM தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் முக்கியமாக தற்போது வானிலை தினசரி கழுத்துப்பட்டை அணிவதற்கு ஏற்றதல்ல மாறாக அது மாணவர்களின் வசதியை பாதிக்கக்கூடும் என்றும் மலேசிய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை, குறிப்பாக பள்ளி உபகரணங்களை தயார் செய்வதில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி சுமையைக் குறைக்கும் மலேசிய கல்வி அமைச்சகத்தின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.


