சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் கொள்கை அடுத்த மாதம் மாநில ஆட்சிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்

26 டிசம்பர் 2025, 4:58 AM
சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் கொள்கை அடுத்த மாதம் மாநில ஆட்சிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்

கோலாலம்பூர், டிச26 – சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் (OKU) கொள்கை தற்போது இறுதி கட்ட ஆய்வில் உள்ளதுடன், அடுத்த மாதம் தொடக்கத்திலேயே மாநில ஆட்சிக்குழு (MMKN) கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, அக்கொள்கை அணுகல்தன்மை, உலகளாவிய வடிவமைப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.

"இது சிலாங்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அனைத்து மாநில முகவர் நிறுவனங்களுக்கும் துறைகளுக்கும் வழிகாட்டுதலாக அமையும். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் உரிமைகளையும் அங்கீகரிப்பதன் மூலம், மேலும் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் (PBT) இக்கொள்கையை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கம்," என்று அவர் `தி ஸ்டார்` நாளிதழில் வெளியான அறிக்கையில் தெரிவித்தார்.

பத்து கேவ்ஸ், யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) சிலாங்கூர் வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பிறகு அன்ஃபால் இவ்வாறு கூறினார்.

அவரது கூற்றுப்படி, புதிய கொள்கை 2017 முதல் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) உலகளாவிய வடிவமைப்பு வழிகாட்டுதல்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. இதன் மூலம் பல்வேறு வயது மற்றும் உடல் திறன்களுக்கான உள்ளடக்கிய மாதிரியாக இது அமைகிறது.

இதற்கிடையில், சிலாங்கூர் யுவானிஸ் அறவாரியத்தின் (Yanis) தலைமை நிர்வாக அதிகாரி கமாருல் ஹிஷாம் யோப் ஹாஷிம், அவ்வமைப்புக்கு அடுத்த ஆண்டு நலன்புரி உதவிகளை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"அடுத்த ஆண்டு நலன்புரி உதவித் திட்டங்களுக்காக மாநில அரசிடமிருந்து RM1 மில்லியன் ஒதுக்கீட்டைப் பெற நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் அதிகமான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவ முடியும், மேலும் அவர்களின் குடும்பங்களின் நிதிச்சுமையையும் குறைக்க முடியும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.