கோலாலம்பூர், டிச 23- திரங்கானு மாநிலம் முழுவதும் மற்றும் கிளந்தான் மாநிலத்தில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாச்சோக், மாச்சாங், பாசிர் பூத்தே ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இதே நிலைதான் பகாங் மாநிலத்தில் ஜெராண்டுட், மாரான், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஜோகூர் மாநிலத்தில் சிகாமட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) முதல் திங்கட்கிழமை (டிசம்பர் 29) வரை தொடர் மழை பெய்யும்.தென் சீனக் கடல் பகுதியில் வியாழக்கிழமை வரை பலத்த காற்று வீசும் மற்றும் கொந்தளிப்பான கடல் எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
இதற்கிடையில், மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய வானிலை மாதிரிகளின் பகுப்பாய்வில் டிசம்பர் 25 முதல் 29 வரை பருவமழை அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலை தீபகற்பத்தின் கிழக்கு பகுதியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர் மழையை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் தென் சீனக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலையும் ஏற்படுத்தும்.பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையத்தளம் மற்றும் மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்து சமீபத்திய மற்றும் நம்பகமான தகவல்களைப் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




