கே.எல்.ஐ.ஏ. ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்புப் பாதை வழங்கத் தயார்- மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தகவல்

22 டிசம்பர் 2025, 9:08 AM
கே.எல்.ஐ.ஏ.  ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்புப் பாதை வழங்கத் தயார்- மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தகவல்
கே.எல்.ஐ.ஏ.  ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்புப் பாதை வழங்கத் தயார்- மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தகவல்

கோலாலம்பூர், டிச 22- மலேசிய போக்குவரத்து அமைச்சு, மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) ஆகியவற்றுடன் இணைந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்புப் பாதையை மீண்டும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவலை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் YB டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும், 50,000க்கும் மேற்பட்ட மலேசிய ஐயப்ப பக்தர்கள் சபரிமலை, கேரளா, இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கே.எல்.ஐ.ஏ.விலிருந்து புறப்படும்போது, பக்தர்கள் விமான நிலையத்தில் நெரிசல் மற்றும் நீண்ட காத்திருப்பு நேரச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

48 நாட்களுக்கும் மேலாக விரதம் இருந்து, காலணிகள் அணியாமல், உடல் ரீதியாக பலவீனமான நிலையில் பயணிக்கும் பக்தர்களுக்கு இந்த நிலைமை பெரும் சவாலாக உள்ளது.

இந்தச் சிறப்புப் பாதை வசதி மூலம், பக்தர்கள் இந்தியாவில் 40 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை எதிர்கொள்ளத் தேவையான சக்தியைச் சேமிக்க முடியும்.

இதைத் தொடர்ந்து, YB டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், மலேசிய ஐயப்ப பக்தர்கள் நலச் சங்கத்தின் தலைவர் திரு. யுவராஜா குருசாமி ஆகியோருடன் இணைந்து, பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விமான நிலையத்தில் ஒரு சிறப்புப் பாதை வசதியை வழங்குமாறு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பம் போக்குவரத்து அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் விளைவாக கடந்த ஆண்டு மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டது.

இந்த வெற்றிகரமான அமலாக்கத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் அதே வசதியை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்காக இன்று ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு MAHB பிரதிநிதி தலைமை தாங்கினார். போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மலேசிய குடிவரவுத் துறை அதிகாரிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

எட்டப்பட்ட முக்கிய முடிவுகளில், விமான நிலையத்தில் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு காத்திருப்பு அறை, புறப்படும் நடைமுறைகளை எளிதாக்குவதற்கான சிறப்புச் சோதனைச் சாவடிகள் ஆகியவை அடங்கும்.

மேலும், ஐயப்ப பக்தர்களுக்கு உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இணையான வசதிகள் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனவே, மலேசிய ஐயப்ப பக்தர்கள் இந்த வசதிகளை முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ஒழுக்கத்தைப் பேணுமாறும், புனித யாத்திரை முழுவதும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சர் YB அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் முனியன், மலேசிய குடிவரவுத் துறை, மலேசியன் ஏர்லைன்ஸ், பாடிக் ஏர் மற்றும் ஏர்ஏசியா ஆகியோருக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக YB டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது ஆழ்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.