அடையாள அட்டை இல்லாதப் பிரச்சனைக்கு ஆவணச் சிக்கல்களே முதன்மை காரணம்

20 டிசம்பர் 2025, 6:04 AM
அடையாள அட்டை இல்லாதப் பிரச்சனைக்கு ஆவணச் சிக்கல்களே முதன்மை காரணம்

பெட்டாலிங் ஜெயா, டிச 20: இளைஞர்கள் மத்தியில் அடையாள அட்டை (MyKad) இல்லாதப் பிரச்சனை, பிறப்பிலிருந்தே ஏற்பட்ட ஆவணச் சிக்கல்களால் உருவாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் சட்டபூர்வமற்ற பிறப்பு, கைவிடப்பட்ட குழந்தைகள், ஆவணமற்ற தத்தெடுப்பு, மேலும் குடியுரிமை இல்லாத பெற்றோர் போன்ற காரணிகளும் அடங்கும்.

பெரும்பாலான வழக்குகள் விண்ணப்பதாரர்களின் தவறால் அல்ல; மாறாக பெற்றோரின் கவனக்குறைவு அல்லது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளால், அதிகாரப்பூர்வப் பதிவு செயல்முறை மேற்கொள்ள முடியாமல் போனதன் விளைவாகவே ஏற்பட்டுள்ளன என்று மலேசியா கிராமப்புற மனிதவள மேம்பாட்டு அமைப்பின் (DHRRA) தலைவர் டத்தோ சரவணன் எம் சினபன் கூறினார்.

“திருமணச் சான்றிதழ் இல்லாத சட்டபூர்வமற்ற பிறப்புகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆவணமற்ற தத்தெடுப்புகள் போன்றவை இதற்கான உதாரணங்கள் ஆகும் என்றார் அவர்.

“தாய்மார்களுக்கு அடையாள ஆவணங்களோ குடியுரிமையோ இல்லாத சம்பவங்கள் உள்ளன. இந்தப் பிரச்சனையை அவர்கள் பிரசவிப்பதற்கு முன் தீர்க்கப்படாவிட்டால், அதே சிக்கல் குழந்தைகளுக்கும் தொடரும்,” என்றார் சரவணன்.

டத்தோ ஹோர்மாட் மண்டபத்தில் நடைபெற்ற சட்ட அறிவுத் திறன் நிகழ்ச்சி: குடியுரிமை தொடர்பான பிரச்சனைகள் என்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, குறிப்பாக மலேசியாவில் பிறந்த இளைஞர்கள் அடையாள அட்டையைப் பெறுவதற்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் தளமாக செயல்படுகிறது.

மேலும், கர்ப்பநிலை மற்றும் வேலை அனுமதி (work permit) தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தாய்மார்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி ஆவணங்களைச் சரிசெய்ய முடியாமல் போகும் நிலைகளும் உள்ளதாக சரவணன் கூறினார்.

இதன் விளைவாக, குழந்தைகள் சட்ட அந்தஸ்து இல்லாமல் பிறக்கின்றனர்.

இதனிடையே, அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத தனிநபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, சட்ட அறிவுத் திறன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீயன் சுங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் மேலும் ஒதுக்கப்படாமல் இருக்க, மனிதநேய அணுகுமுறையும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் (NGO) இடையிலான ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.