டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம் - ஆரம்பத்திலேயே ஏன் கொலை வழக்காக விசாரிக்கப்படவில்லை? எம். குலசேகரன் கேள்வி 

18 டிசம்பர் 2025, 3:41 AM
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம் - ஆரம்பத்திலேயே ஏன் கொலை வழக்காக விசாரிக்கப்படவில்லை? எம். குலசேகரன் கேள்வி 

கோலாலம்பூர், டிச 18- கடந்த மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு ஆரம்பத்திலிருந்தே கொலைக் குற்றமாக ஏன் விசாரிக்கப்படவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

அதே வேளையில், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அதிகாரிகள் பயன்படுத்திய சட்டப் பிரிவின் வகைப்பாடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.இருப்பினும், இந்த வழக்கை தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றமாக மறுவகைப்படுத்த சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) நேற்று வெளியிட்ட அறிக்கையை அவர் வரவேற்றார்.இந்த நடவடிக்கை விசாரணையில் வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், உரிய செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் இது முக்கியம் என்றும் அவர் விளக்கினார்."இந்த வழக்கை மறுவகைப்படுத்தியதை வரவேற்றாலும், விசாரணை விரைவாகவும் முழுமையாகவும் நடத்தப்பட்டால் மட்டுமே அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை நிலைநிறுத்தப்படும்."சம்பவத்தைப் பற்றிய சாட்சிகளின் நினைவுகள் புதிதாக இருக்கும்போதே அனைத்து தொடர்புடைய ஆதாரங்களையும் சேகரித்து வாக்குமூலங்களைப் பெறுவதை உறுதிசெய்ய காவல்துறை விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.கடந்த மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றமாக மறுவகைப்படுத்த சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நேற்று அறிவித்தது.மலேசிய காவல்துறை (PDRM) இந்த வழக்கின் அறிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்குச் சமர்ப்பித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அத்துறை தெரிவித்தது.இதற்கிடையில், இந்த வழக்கின் விசாரணை முறை மற்றும் இறுதி முடிவு, அதிகாரிகளின் தொழில்முறைத் தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குலசேகரன் நினைவூட்டினார்.குறிப்பாக, அதிகாரத்தில் உள்ள தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளின் தயார்நிலை மற்றும் சாதாரண மக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க நாட்டின் நிறுவனங்களின் திறன் ஆகியவற்றைப் பொறுத்து இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.