கோலாலம்பூர், டிச 9- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை முழுவதுமாக சீரடைந்து விட்டது. அம்மாநிலத்தில் திறக்கப்பட்டிருந்த தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் அனைத்தும் மூடப்பட்டதாகப் பேரிடர் நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நேற்று கோல சிலாங்கூரில் கடைசியாக திறக்கப்பட்டிருந்த வெள்ள நிவாரண மையம் தற்போது மூடப்பட்டுள்ளதால் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
அங்கு தங்கியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தங்களின் இல்லத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் வெள்ள நிவாரண மையங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
122 குடும்பங்களைச் சேர்ந்த 411 பேர் இன்னும் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று மாநிலப் பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
இன்று மாலை வேளையில் பேராவில் உள்ள மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மெட்மலேசியா கணித்துள்ளது.


