இலங்கை, டிச 2 - இலங்கையைத் தாக்கிய டித்வா புயலில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகளை வழங்குவது உட்பட சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அந்நாட்டின் மீட்பு பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தால் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையைத் தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக மலைப்பாங்கான மத்தியப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இந்த பேரழிவினால் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அந்நாட்டை மீண்டும் மீட்சியடையச் செய்வதற்கான தேவை இருப்பதாக அத்தியாவசிய சேவைக்கான தலைமை இயக்குநர் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார்.
மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மற்றும் விமான சேவை மீண்டும் செயல்பட தொடங்கியிருப்பதாகவும் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டார்.
இயற்கை பேரிடரில் முழு நாடும் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இலங்கை வரலாற்றில் இது மிகப் பெரிய சவாலாகக் கருதப்படுகிறது என அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பெர்னாமா


