கோலாலம்பூர், 1 டிசம்பர் — மின்சார வாகன (EV) சூழலமைப்பு மேம்படுத்தும் தேசிய முயற்சிக்கான முக்கிய முன்னேற்றமாக, பொருடுவா இன்று தனது முதல் மின்சார வாகனமான QV-E மாடலை அறிமுகப்படுத்தியது. காப்புறுதி மற்றும் பேட்டரி செலவைத் தவிர்த்த வாகனத்தின் விலை RM80,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
QV-E மாடல், “தொலைநோக்கான மின்சார இயக்கத்திற்கான தேடல்” எனப் பொருள் தரும் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக விளக்கப்பட்டது. இந்த EV திட்டம் RM800 மில்லியன் மேம்பாட்டு செலவை உட்கொண்டதுடன், 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொண்டதாக பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2023 செப்டம்பர் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட Pelan Induk Perindustrian Baharu 2030 (NIMP 2030) முயற்சியின் கீழ், உள்ளூர் மின்சார வாகன சூழலமைப்பு உருவாக்க Perodua தலைமை நிறுவனமாக நியமிக்கப்பட்டது.
“அந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் பொருடுவா ஒரு மின்சார வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது மிகவும் பெரியதும் மகத்தானதுமான இலக்காக இருந்தது. அப்போது, இதற்குத் தேவையான உள்ளூர் திறனும் நிபுணத்துவமும் போதுமான அளவில் இருக்க முடியாது என்ற அச்சம் எனக்குள் இருந்தது,” என்று பிரதமர் நினைவுகூர்ந்தார்.
ஆனால் இன்று QV-E வெளியீடு, பொருடுவாவின் சாதனையை மட்டுமல்ல, உள்ளூர் நிபுணத்துவம், ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய பெருமையையும் வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
“இந்த வாகனம், நமது உள்ளூர் திறமையாளர்களின் திறனை நிரூபித்த மிகப் பெரும் வெற்றிகளில் ஒன்றாகும்,” என்று பிரதமர் அன்வார் பெருமையுடன் கூறினார்.


