காஜாங், நவ 27- Selangor Juara, Rakyat Sejahtera என்ற கருப்பொருளைக் கொண்ட சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2026-ஐ, காஜாங் மாநகராட்சி மன்ற உறுப்பினர் திரு. இராமசந்திரன் முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
மொத்தமாக RM3.23 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், மக்களின் நலன், கல்வி, மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக, தகுதியுள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் RM300 வழங்கும் திட்டமான Bantuan Kehidupan Sejahtera Selangor (பிங்காஸ்)-ஐத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர் தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.
விண்ணப்பதாரர்களின் மாத வருமான வரம்பை RM3,000-லிருந்து RM5,000 ஆக உயர்த்தியதன் மூலம், செலவினச் சுமையை எதிர்கொள்ளும் சிலாங்கூர் மக்களின் மீது முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாடாணி அரசாங்கம் கொண்டுள்ள கரிசனையும் அக்கறையும் நிரூபணமாகியுள்ளது.
பிங்காஸ் திட்டம், B40 மற்றும் குறைந்த M40 பிரிவினரின் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் மிகவும் பயனுள்ள சமூக முன்முயற்சிகளில் ஒன்றாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் மட்டத்தில் அதிக பலனை அடைய, காஜாங் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சில முக்கிய அம்சங்களை வலியுறுத்தியுள்ளார்:
பயனாளிகளின் ஒதுக்கீட்டை அதிகரிப்பது மற்றும் தகுதிக்கான அளவுகோலை விரிவுபடுத்துவது அவசியம், இதன்மூலம் மேலும் பல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பிங்காஸ் நன்மைகளைப் பெற முடியும்.
உதவி உரியவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, கிராமத் தலைவர், சமூகத் தலைவர், Penghulu Mukim, மற்றும் மன்ற உறுப்பினர்கள் (மக்கள் பிரதிநிதித்துவ கவுன்சில் மூலம்) போன்ற உள்ளூர் தலைவர்கள் மூலம் பயனாளிகளின் ஒதுக்கீட்டைப் பிரித்து வழங்குவது, கசிவுகளைத் தவிர்த்து, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் முழுமையாகச் சென்றடைய உதவும்.
அத்துடன், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களும் இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்களை விளம்பரப் படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், ஏனெனில் அந்த அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு மக்கள் நிதி பயன்படுத்தப் படுகிறது. இது மடாணி அரசாங்கத்தின் மீதான எதிர்மறையான கருத்துக்களை நீக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் அணுகுமுறை, சிலாங்கூர் மக்களைத் தொடர்ந்து மையப் புள்ளியாக வைக்கும் மாநில அரசாங்கத்தின் உறுதியான முயற்சிகளுக்குச் சான்றாக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகள், சமூகங்கள், மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், பிங்காஸ் போன்ற உதவிகள் சிலாங்கூரில் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தாம் MPKj அளவில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.


