ஷா ஆலம், 27 நவம்பர்: சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2025 நடைபெறும் காலத்தில், மொத்தம் 5,000 மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘KitaSelangor ’ பற்றுச்சீட்டுகள் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு RM100,000 ஒதுக்கியுள்ளது.
இந்த உதவி குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் (PPAS) நிறுவன பிரிவு தலைவர் சஃப்ருல்லா அரிஸ் தெரிவித்தார்.
இந்த பற்றுச்சீட்டு பெறுபவர்களை தேர்வு செய்வதற்காக மாநில கல்வித்துறை (JPNS) மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் சமூக சேவை மையங்களுடன் இணைந்து தரவுகள் சேகரிக்கப் பட்டுள்ளன.
“JPNS மற்றும் சேவை மையங்களின் தரவுகள் அடிப்படையாக கொண்டு தகுதியான மாணவர்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டுள்ளனர்.
அவர்கள் சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது இந்த பற்றுச்சீட்டை பயன்படுத்தி புத்தகங்கள் வாங்கலாம்,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2025 நிகழ்வு நாளை முதல் டிசம்பர் 7 வரை, ஷா ஆலமில் அமைந்துள்ள செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் (SCCC) காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான புத்தக தலைப்புகள், பல நிகழ்ச்சிகள் மற்றும் RM500 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளுடன், இவ்விழாவில் 300,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட காட்சியாளர்களுடன் சுமார் 400 கண்காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன


