ஷா ஆலம், 26 நவம்பர் — தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ள நிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 23 தற்காலிக இடமாற்ற மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறை தெரிவித்துள்ளது . நேற்றிரவு 7.55 மணிவரை மாநிலம் முழுவதும் உள்ள இடமாற்ற மையங்களில் 790 குடும்பங்களைச் சேர்ந்த 2,919 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கோல சிலாங்கூரில் அதிகமானோர் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர்; அங்கு அமைக்கப்பட்ட ஒன்பது மையங்களில் மொத்தம் 1,570 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கிள்ளானில் நான்கு மையங்களில் 595 பேர், ஷா ஆலமில் மூன்று மையங்களில் 356 பேர், சபாக் பேர்ணாமில் மூன்று மையங்களில் 231 பேர், ஹுலு லங்காட்டில் இரண்டு மையங்களில் 132 பேர், செப்பாங்கில் ஒரு மையத்தில் 19 பேர் மற்றும் ஹுலு சிலாங்கூரில் ஒரு மையத்தில் 16 பேர் தங்கியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட மாநில அரசு சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்கள், வானிலை எச்சரிக்கைகளை கடைபிடித்து, அதிகாரப்பூர்வ தகவல் மூலம் வழங்கப்படும் புதுப்பிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.




