சபா பெர்ணம், நவம்பர் 24: சபா பெர்ணம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (MBI) ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த மையங்களில் தங்கியுள்ளவர்கள் வசதியாக இருப்பதை உறுதி செய்ய அன்றாடத் தேவைகளுக்கான உதவிகள் உடனடியாக விநியோகிக்கப்படும் என்று அறக்கட்டளையின் தலைவர் அஹ்மத் அஸ்ரி சைனால் நோர் தெரிவித்தார்.
விநியோகிக்கப்படும் உதவிகளில் பிஸ்கட், ரொட்டி, குடிநீர், போர்வைகள், தலையணைகள், கெட்டில் மற்றும் செலவழிப்பு டயப்பர்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். தற்போது இரண்டு மையங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும், மேலும் சில மையங்கள் திறக்கப்படலாம் என்ற தகவல் உள்ளதால், மற்ற நிவாரண மையங்களுக்கும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மேலும், மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகச் சமூக நலத் துறை (JKM) மற்றும் டாருல் எஹ்சான் இஸ்லாமிய அறக்கட்டளை (Yide) போன்ற நிறுவனங்களுடன் MBI தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. வெள்ளம் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை அவர்கள் வசதியாக இருப்பதை உறுதி செய்ய ஆரம்பக்கட்ட உதவிகளை வழங்குவதுதான் தற்போதைய முக்கிய இலக்கு என்றும், உதவிகளைச் சீரமைக்கவும், அவை போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும் JKM மற்றும் Yide உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அஹ்மத் அஸ்ரி கூறினார்.
இதற்கிடையில், JKM இன் பேரிடர் தகவல் இணைய தளத்தின்படி, இன்று நண்பகல் நிலவரப்படி, சிலாங்கூரில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேரை தங்க வைக்கும் வகையில் ஐந்து நிவாரண மையங்கள் திறக்கப் பட்டுள்ளன. இந்த ஐந்து மையங்களில், சபா பெர்ணமில் இரண்டு மையங்களும், உலு லங்காட், கோலா சிலாங்கூர் மற்றும் ஷா ஆலம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு மையமும் திறக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




