சபாக் பெர்ணம், நவ 24- சபாக் பெர்ணம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் இன்று காலை 10.08 மணி நிலவரப்படி தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் இணையதளத்தின்படி, பாதிக்கப்பட்ட அனைவரும் டேவான் ஸ்ரீ பெர்ணம் (Dewan Sri Bernam) மற்றும் டேவான் ஸ்ரீ ஸ்கிஞ்சான் (Dewan Sri Skinchan) ஆகிய இரண்டு நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்று முதல் திறக்கப்பட்ட டேவான் ஸ்ரீ பெர்ணம் மையத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், டேவான் ஸ்ரீ ஸ்கிஞ்சான் மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் தங்கியுள்ளனர். தொடர் மழை காரணமாக ஏற்படும் வெள்ளப் பெருக்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அனைவரும் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) சிலாங்கூர் தெரிவித்துள்ளது.
மேலும், தொடர் மழையால் நீர் வழிந்தோடும் அபாயம் உள்ளிட்ட தற்போதைய சூழ்நிலையை மதிப்பிடுவதற்காக, தீயணைப்பு வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அபாயகரமான பகுதிகளைக் கண்காணிக்க, நான்கு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (BBP) 21 வீரர்கள் கொண்ட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
பிபிபி சுங்கை புசார் (BBP Sungai Besar) குழுவினர் தாமான் பெர்காட், பாகான் சுங்கை புசார், கம்போங் நெலாயன் மற்றும் முவாரா சுங்கை ஹாஜி டொரானி ஆகிய பகுதிகளையும்; பிபிபி பெஸ்தாரி ஜெயாவின் (BBP Bestari Jaya) குழுவினர் தாமான் சௌஜானா அமான், பிந்து ஆயர் ஈஜோக், ஜாலான் அப்துல் அஜீஸ், ஜாலான் ரொபின்சன் மற்றும் ஜாலான் எஹ்ஸான் ஆகிய பகுதிகளையும் கண்காணித்து வருகின்றனர்.
பிபிபி ஷா ஆலம் (BBP Shah Alam) ஸ்ரீ மூடா செக்ஷன் 25, கம்போங் பாரு ஹைகாம் செக்ஷன் 26, ஜாலான் கெபூன், பாடாங் ஜாவா மற்றும் கம்போங் கெபபூன் பூங்கா செக்ஷன் 22 ஆகிய பகுதிகளிலும்; பிபிபி புக்கிட் ஜெலுதோங் (BBP Bukit Jelutong) செக்ஷன் 13 மற்றும் டி.டி.டி.ஐ. ஜெயா (TTDI Jaya) ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.




