ஷா ஆலாம், நவ 19 - இந்திய சமூகத்துக்கான RM500,000 ஒதுக்கீட்டை வரவேற்றாலும், இந்திய சமூகத்திற்கு "உதவி"க்கு மேல் வாய்ப்புகளே அதிகம் தேவைப்படுகிறது என சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, I-SEED திட்டத்தை RM10 மில்லியன் அளவிற்கு உயர்த்தி, வியாபார தொடக்க மூலதனம், இன்கியூபேட்டர் திட்டங்கள் மற்றும் நிபுணர் வழிகாட்டுதல் மூலம் வறுமை சங்கிலியை (poverty chain) முறிக்க வேண்டியது அவசியம். நல்லாட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல, Selangor Integrity & Governance Dashboard மூலம் திட்ட நிலை, ஒப்பந்தங்கள் மற்றும் கசிவு அபாயங்களை நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தி தேசிய மாதிரியாக மாற்ற வேண்டும். மேலும், GLC/GLIC நிறுவனங்களில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான பல்வகை பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி என்பது தேர்வுகளுக்கான பயிற்சி மட்டுமல்ல, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகும். எனவே, AI/தானியக்கம்/தரவியல் மாணவர்களுக்குத் தொழில் பயிற்சி உறுதி அளிக்கும் Selangor AI Talent Guarantee Scheme-ஐ உருவாக்குவது அவசியம். கோத்தா கெமுனிங் சமூகக் கற்றல் மையத்தில் ரோபோடிக்ஸ், STEM மற்றும் B40 மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கப்பட வேண்டும். புதிய தலைமுறைக்கு நிதி அறிவு, பண மேலாண்மை மற்றும் தொழில் முனைவர் கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும். UNISEL பல்கலைக்கழகம் உலகின் Top 100 பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்து சர்வதேச திறமையாளர் மையமாக மாற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.




