ad

கிள்ளான், ஜாலான் பாப்பான் நகர்ப்புற குடியேற்றப் பிரச்சனைக்குத் தீர்வு; ஏழு ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க சிலாங்கூர் மாநில அரசு நடவடிக்கை

17 நவம்பர் 2025, 8:44 AM
கிள்ளான், ஜாலான் பாப்பான் நகர்ப்புற குடியேற்றப் பிரச்சனைக்குத் தீர்வு; ஏழு ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க சிலாங்கூர் மாநில அரசு நடவடிக்கை

ஷா ஆலாம், நவ 17- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் பாண்டமாரன், ஜாலான் பாப்பான் பகுதியிலுள்ள நகர்ப்புறக் குடியேற்றவாசிகளின் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு நியாயமான, மனிதநேய மிக்க மற்றும் முழுமையான தீர்வைக் காண மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு உறுதியளித்துள்ளது.

இந்த விவகாரம், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இப்போது நேர்மறையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குடியேற்றவாசிகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில், நில மேம்பாட்டாளரான Melati Ehsan Consolidated Sdn. Bhd. (MECSB) நிறுவனத்திடமிருந்து சுமார் 7 ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலம் ஒப்படைப்பு, மாநில அரசின் துணை நிறுவனமான Permodalan Negeri Selangor Berhad (PNSB) மூலம் குடியேற்றவாசிகளுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தப்படும். நிரந்தரத் தீர்வு உறுதி செய்யப்படும் வரை, தற்காலிகமாக வீடில்லாமல் எந்தவொரு குடியேற்றவாசியும் கை விடப்பட மாட்டார்கள் என்றும், தேவைப்படுவோருக்கு நியாயமான வாடகையில் ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் தற்காலிகக் குடியிருப்புகளை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகவும் சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போஹான் அமான் ஷா நவம்பர் 14, 2025 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், குடியேற்றவாசிகளுடன் கூடிய வீடுகளை இடிக்கும் பணி, நிலம் ஒப்படைப்பு இறுதி செய்யப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த ஏழு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதன் மூலம், ஜாலான் பாப்பான் குடியேற்றவாசிகளுக்கு ஒரு தெளிவான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நீடித்த நீண்ட காலத் தீர்வை உறுதி செய்வதற்கான சரியான பாதையில் மாநில அரசு உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.