கோலாலம்பூர், நவம்பர் 15 — அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்காக மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் KTM இன்டர்சிட்டி ரயில் டிக்கெட்டுகள் வரும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.
பண்டிகை காலம், பொது விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களுக்கு முன்னதாக பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட உதவும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கெரெததாப்பி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 1 முதல் Shuttle Tebrau, ETS மற்றும் KTM Intercity ரயில்கள் புதிய அட்டவணையின் படி இயக்கப்படும் என்றும் அறிவித்தது. “ETS சேவைக்கு தினமும் 34 பயணங்கள் வழங்கப்படும். கூடுதலாக, குளுவாங்–KL Sentral–குளுவாங் பாதைக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இரண்டு சேவைகள் சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் ETS தினசரி சேவைகள் 36 ஆகும்.
இதற்கிடையில், JB Sentral–Gemas இடையிலான Ekspres Selatan சேவைக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய தேதியை பின்னர் அறிவிப்பதாகவும் KTMB கூறியது.
பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, புதிய அட்டவணையை KTMB செயலி, அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள், இணையதளம் அல்லது KTMB தொடர்பு எண் (03-9779 1200) மூலம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




