ஷா ஆலம், நவ 14: மழலையர் பள்ளிகளுக்கான கட்டண உதவி திட்டம் (துனாஸ்) மூலம் 3,700 குழந்தைகள் அடுத்த ஆண்டில் பயன்பெற உள்ளனர். இத்திட்டத்திற்கு RM2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிகளுக்கான கட்டண உதவியாக மாதம் RM50 உதவி வழங்கப்படும். அக்குழந்தைகள் மாதக் குடும்ப வருமானம் RM5,000 அல்லது அதற்கும் குறைவாகக் கொண்ட குடும்பங்களை சேர்ந்திருக்க வேண்டும் என மந்திரி புசார் அமிருடின் சாரி கூறினார்.
“துனாஸ் திட்டம் சிலாங்கூரில் ஒவ்வொரு குழந்தைக்கும் உயர் தர ஆரம்ப கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு, மாநில அரசு சிலாங்கூர் உயர்தர கல்வியில் முன்னணி மாநிலமாக வலுப்படுத்த உறுதியாக உள்ளது.
“இதற்காக Education Empowerment Program மற்றும் Teacher Development Program போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் ஆசிரியர்களின் திறன், தொழில்முறைத் தன்மை மற்றும் நலன் வளர்ச்சியினை ஊக்குவித்து, மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்த முன்முயற்சியின் மூலம், மாநில அரசு போட்டி சக்தியுடைய, ஒழுக்கமுள்ள மற்றும் அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்க விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.
2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட துனாஸ் திட்டம் 2023ஆம் ஆண்டுவரை 21,236 பெற்றோர்களுக்கு பயன் அளித்துள்ளது.




