கோலாலம்பூர், நவ 14- மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில், கிக் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 10 முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்கள், இந்தக் கொள்கைச் சீர்திருத்தங்கள் அமைச்சகத்தின் மூன்று முக்கிய முன்னுரிமைகளான: நலன் (Kebajikan), திறன் (Kemahiran), மற்றும் விளைதிறன் (Keberhasilan) (3K) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், இது அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நீதியான மற்றும் விரிவான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த முக்கிய சீர்திருத்தங்களில், பங்களிப்பாளர்களுக்கான சலுகைகளை 20 சதவீதம் உயர்த்துதல், மரணப் பலனை RM2,000 இலிருந்து RM3,000 ஆக அதிகரித்தல், மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஊனமுற்றோர் திட்டத்தை (Skim Keilatan) விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். தேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பில் மேலும் பல மேம்பாட்டு முன்முயற்சிகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
அவற்றில் மிக முக்கியமான ஒரு மாற்றம், பங்களிக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 24 மணி நேர பெர்கெசோ பாதுகாப்பை வழங்குவதாகும். "நாம் செயல்படுத்தி, நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து வரும் ஒரு புதிய சீர்திருத்தம், விதிமுறையை மாற்றக்கூடியதாகும, அதாவது, பங்களிப்புச் செய்யும் தொழிலாளர்களுக்கு பெர்க்கெஸோவின் 24 மணி நேரப் பாதுகாப்பை வழங்குவது" என்று அவர் கூறினார்.
இதுமட்டுமின்றி, அமைச்சர் அவர்கள் வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திலும் (Skim Insurans Pekerjaan - SIP) பல மேம்பாடுகளை அறிவித்தார். இதில் வேலை தேடும் சலுகை, திறன் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்கான சலுகை, பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் வேலை பெறுபவர்களுக்கான RM1,000 போக்குவரத்துச் சலுகை (mobility allowance) ஆகியவை அடங்கும்.




