ஷா ஆலாம், நவ 12- சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் கீழ் உள்ள யாயாசான் எம்.பி.ஐ அறவாரியம் மூலம் உதவி தேவைப்படுவோர்களுக்குப் பல்வேறு சமூகநல உதவிகளையும் கல்விக்கான உதவிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வகையில், இன்று சுமார் 28 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இந்த மடிக்கணினிகளையும் இலவச இணைய இணைப்பு கருவிகளையும் பெற்ற வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அறவாரியத்திற்குத் தங்களின் நன்றிகளைத் தெரிவித்து கொண்டனர்.
வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகள் யாவும் மாணவர்களின் மேற்கல்விக்குப் பெரும் உறுதுணையாக அமையும் என்று உதவி பெற்றுக் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதிநிதிகள் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி ஷா ஆலாமிலுள்ள டாருல் எஹ்சான் கட்டிடத்தின் 18ஆவது தளத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாயாசான் எம்.பி.ஐ அறவாரியத்தின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் அவர்கள், மடிக்கணினிகளையும் உதவிநிதிகளையும் வழங்கினார்.

மேலும், 46ஆவது சர்வதேச நாட்டுப்புறப் போட்டி, நடனம் மற்றும் இசை விழா "பிராக் ஸ்டார்ஸ் (PRAGUE STARS) மற்றும் சர்வதேச நடனம் மற்றும் இசை விழா "புடாபெஸ்ட் எத்னோ ஃபெஸ்ட்" ஆகிய திட்டங்களுக்காக செமினி தாமான் பெலாங்கி தேசிய பள்ளிக்கு RM8,000 நிதியுதவி அளிக்கப்பட்டது.
அதேபோல், மலேசியாவின் புல்வெளியில் விளையாடப்படும் பந்துவீச்சு வீராங்கனையான நோர் ஃபாரா அய்ன் அப்துல்லா, உலகிலேயே சிறந்த பந்துவீச்சு வீரராக நாட்டுக்குப் பெருமை சேர்த்தமைக்கான பாராட்டாகவும், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 2025 உலகக் கோப்பை மற்றும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்பதற்கான ஆதரவாகவும் RM10,000 வழங்கப்பட்டது.

இறுதியாக, வறிய நிலையில் உள்ள நோயாளிகளான ஷா அப்துல் ஹலீம் அலி மற்றும் முஸ்தபா சிடெக் ஆகிய இருவருக்கும் RM1,990.00 வழங்கப்பட்டது. இந்த நன்கொடையை யாசான் பென்யாயங் அறக்கட்டளையின் (Yayasan Penyayang) பிரதிநிதி ஒருவர் பெற்றுக் கொண்டார்.




