ஷா ஆலம், செப் 11 - மலேசியப் புள்ளிவிவரத் துறை வெளியிடும் தரவு, சிலாங்கூர் மாநில அரசின் கொள்கை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களைச் சிறப்பாகவும் நிலைத்தன்மையுடனும் வடிவமைக்க முக்கிய பங்காற்றுகிறது என தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
மாநிலத்தின் தொழில்துறை, சேவை, கட்டுமானம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் உள்ள வளர்ச்சி நிலையை மலேசிய புள்ளிவிவரத் துறை சேகரிக்கும் தரவு தெளிவாகக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
“இந்த தரவுகள் சிலாங்கூரின் பொருளாதார செயல்திறனை மேம்படுத்தவும், உள்நாட்டு மொத்த உற்பத்தி (KDNK) உயர்வை அடையவும் உதவுகின்றன. மாநில வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கு போதுமான மற்றும் துல்லியமான தரவு மிக அவசியம்,” என அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற 2026 பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பான பங்குதாரர் ஆலோசனை அமர்வு (Sesi Libat Urus Banci Ekonomi 2026) முடிந்தபின் ஊடகங்களிடம் நஜ்வான் இவ்வாறு தெரிவித்தார்.
மாநில அரசு, பிளாட்ஸ் வாயிலாக தொழில்முனைவோர் தொடர்பான தரவையும் சேகரித்து வருகிறது. இதன் மூலம் உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை விநியோகம் மேலும் நியாயமான மற்றும் துல்லியமானதாக அமையும்.
“அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு திட்டம் அல்லது உதவி வந்தாலும், அந்த விநியோகம் சேகரிக்கப்பட்ட தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.
வணிகத் துறையில் இருந்து பெறப்படும் துல்லியமான தரவு, சிலாங்கூரின் முதலீட்டு திறனை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்புவதற்கும் முக்கிய பங்காற்றுகிறது.
முன்னதாக, மலேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவின்படி, சிலாங்கூர் மாநிலம் 6.3 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, தேசிய சராசரியை மிஞ்சியுள்ளது. இத்தகைய வளர்ச்சி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 26.2 சதவீதம் பங்களிப்பு அளித்து, சிலாங்கூரை மலேசியாவின் முக்கிய தொழில் மற்றும் சேவை மையமாக உறுதிப்படுத்துகிறது.


