ad

பெரோடுவா தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது

11 நவம்பர் 2025, 7:57 AM
பெரோடுவா தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது

ரவாங், நவ 11 - மலேசியாவின் தேசிய வாகன உற்பத்தியாளர் ``Perusahaan Otomobil Kedua Sdn Bhd`` (பெரோடுவா) தனது முதல் மின்சார வாகனத்தை (EV) இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வாகனம் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், தேசிய தேவைகள் மற்றும் பொருளாதார திசையுடன் இணைந்ததாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

முழுமையாக மலேசியாவில் தயாரிக்கப்படும் பெரோடுவா மின்சார வாகனத்தின் அறிமுகம் தேசிய அஜெண்டாவின் ஒரு பகுதியாக இருக்கும் என நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார் கூறினார்.

“இந்த மின்சார வாகனம் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்,” என்று அவர் ரவாங்கில் பெரோடுவா பணியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த மின்சார வாகனத்தின் அறிமுகம் மலேசியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திறனையும், உள்ளூர் பணியாளர்களின் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

“இந்த சாதனை பெரோடுவா நிறுவனத்தின் தொழில்நுட்ப திறனையும், சிறந்த நிர்வாகக் கட்டுப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. எனவே, மலேசியா மடாணி அரசு மற்றும் மலேசியா மக்களும் பெரோடுவாவுக்கு முழு ஆதரவை வழங்கும்,” என்று அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த 32 ஆண்டுகளில் நிறுவனம் மொத்தம் 5.5 மில்லியன் வாகனங்களை தயாரித்துள்ளது என பெரோடுவா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஶ்ரீ சைனல் அபிடின் அஹ்மட் தெரிவித்தார்.

“1993 ஆம் ஆண்டிலிருந்து பெரோடுவா சுமார் RM13.4 பில்லியன் முதலீடு செய்துள்ளது. அதே நேரத்தில், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காகவும் மின்சார வாகனத் துறையில் முதலீடு செய்யவும் அந்நிறுவனம் தயாராக உள்ளது,” என்றார் அவர்.

இந்த ஆண்டு மே மாதத்தில், பெரோடுவா தனது புதிய ராவாங் தொழிற்சாலையில் மின்சார வாகன உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் 30 சதவீத பணிகளை மேற்கொள்ளும் என்றும், வாகனத்தின் விலை RM80,000-க்கு கீழ் இருக்கும் என்றும் அறிவித்தது.

மாதந்தோறும் சுமார் 500 யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் இந்த வாகனம், இளைஞர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு மலிவு விலை மின்சார வாகனத்தைச் சொந்தமாகக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.