பந்திங், நவம்பர் 2 — பிங்காஸ் எனும் வாழ்வாதார உதவி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு நவம்பர் மாத இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தாம் மிகவும் ஆதரிப்பதாகவும் வரவேற்பதாகவும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு இன்று பந்திங்கில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது சட்டமன்ற தொகுதி சேவை மையத்தில் பதிந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதேசமயம், அனைத்து தேவையான ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றப் பட வேண்டும் என்றும், அது சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்கும் என்றும் நினைவூட்டினார்.
மேலும் இந்த முறை திட்டத்தின் நடைமுறைப்படுத்த லில் எந்த மாற்றமும் இல்லை. அனுமதிக்கப்பட்ட பொருட்களின் வகைகளும், பங்கேற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளும் முந்தையபடி நீடிக்கின்றன என்று கூறினார். மாதம் RM300 மதிப்புள்ள இந்த உதவி 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது உணவு, மருந்துகள் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும்.
இந்த புதிய விண்ணப்பங்கள், இன்னும் பூர்த்தியாகாத இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உதவி தேவைப்படுவோர் www.bingkasselangor.com இணையதளம் அல்லது Selangkah பயன்பாட்டின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




