பெட்டாலிங் ஜெயா, நவ 2; பாங்கி தமிழ்ப் பள்ளிக்கு விளையாட்டு திடல் கண்டிப்பாக வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது. இதற்கு எனது முழு ஆதரவு உண்டு. இதே போல் 26 ஆண்டுகளுக்கு முன்பு எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு வாங்கி கொடுக்க வேண்டிய மீதம் உள்ள 3 ஏக்கர் நிலத்தை ம.இ.கா எடுத்துக் கொண்டது ( திருடிக் கொண்டது என்று நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை.) இதன் விளைவு இப்பள்ளிக்கு அன்று முதல் இன்று வரையில் முழுமையான விளையாட்டு திடல் இல்லை.
ஏழை தமிழ் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மிக முக்கியமான உடல் ஆரோக்கியத்திற்கு ஊன்று கோளான விளையாட்டு திடல் கிடைக்கவில்லை..எங்கள் பள்ளிக்கு விளையாட்டு திடல் வேண்டும் என்று கடந்த 26 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகள், போராட்டங்கள் நடத்தி விட்டோம்.
உண்ணாவிரத போராட்டத்தின் வழி சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யத்தி-லிருந்து இந்தியா கூட விடுதலை பெற முடிந்தது.
ஆனால் , உலகுக்கு காந்தி கற்றுத் தந்த உண்ணாவிரத போராட்டம் ம.இ.கா விடம் எடுபடவில்லை. பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் பள்ளி நிலத்திற்கு உண்ணாவிரத போராட்டம் நடந்தது உச்சக் கட்டம். அன்றைய சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசாவும் டத்தோ ஸ்ரீ சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாண்புமிகு சிவராசா இந்த நிலத்திக்கான மாற்று நிலம் வேறு இடத்தில் வாங்கி கொடுக்கிறோம், தமிழ்ப் பள்ளிக்கு இந்த நிலத்தை விட்டுக் கொடுங்கள் என்று அன்றே மாற்று வழி கொடுத்தார்.
அவரது சுமூகமான இந்த தீர்வுக்கான வழியையும் நிராகரித்து விட்டனர் டத்தோ ஸ்ரீ சரவணனும் டத்தோ முருகேசனும். ம.இ.கா. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மையேன்றால் அன்றே தீர்வு கிடைத்திருக்கும் எங்கள் பள்ளி திடல் விவகாரத்திற்கு.அன்றைய ம.இ.கா. பொதுச் செயலாளர் டத்தோ முருகேசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இருப்பினும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.
சரவணன், முருகேசன் மற்றும் டான் ஸ்ரீ குமரனிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இன்று வரை எங்களது தமிழ்ப் பள்ளி விளையாட்டு திடல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வில்லை. ஏன் ம.இ.கா.வின் தேசியத் தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ பழனிவேலிடமும் பல வழியில் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. அனைத்து முயற்சியும் தோல்வி கண்டது. தமிழ் பள்ளி திடல் விவகாரத்தில் ம.இ.கா. தான் முட்டுக் கட்டை என்ற வீண் குற்றச்சாட்டு எதற்கு?
இப்பிரச்னைக்கு தற்போதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் டத்தோ. தமிழ் பள்ளிக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு தமிழ்ப் பள்ளி நிலத்தையே அபகரிப்பது நியாயமா டத்தோ? அப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டு போட்டி நடத்த முறையான திடல் வசதி இல்லை. இப்பள்ளி மாணவர்களுக்கு டத்தோ சந்தோக் சிங் கால்பந்து விளையாட்டு பயிற்சி கொடுக்க முன்வந்தார்.
முறையான திடல் வசதி இல்லாததால் இந்த அரிய முயற்சியும் தோல்வி கண்டது. இப்பள்ளி மாணவர்கள் 100 மீட்டர் நெடுந்தூரம் ஓடுவது இல்லை. இதே போல் 200மீட்டர், 400 மீட்டர் தூரமும் ஓடியது இல்லை. முறையான திடல் தட போட்டிகள் இப்பள்ளியில் நடத்த முடியாமல் இருப்பதற்கு ம.இ.கா. பெரும் தடையாக இருக்கிறது. இப்பள்ளிக்கு முறையான திடல் வசதி வேண்டும் என்பதே இப்பள்ளியின் முன்னாள் மாணவன், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ம.இ கா.வின் முன்னாள் கம்போங் காயூ ஆரா தீமோர் கிளையின் தலைவர் என்ற முறையில் சுப்பையா சுப்ரமணியத்தின் பணிவான கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். டத்தோ.!
எங்கள் பள்ளிக்கு கிடைக்க வேண்டிய திடல், கிடைக்காமல் போனதற்கு ம.இ.கா. தான் காரணம் என்று இப்பள்ளியின் வரலாற்றில் இடம் பெறக் கூடாது. உங்களது அரிய முயற்சியால் எங்கள் நீண்ட நெடிய தமிழ்ப் பள்ளி திடல் விவகாரத்திற்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.
இப்படிக்கு,சுப்பையா சுப்ரமணியம்.