கோலாலம்பூர், நவம்பர் 1 —இன்று காலை பெட்ரோனாஸ் டவர் 3-இல் மேல்தளத்தில் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோலாலம்பூர் தீ மற்றும் மீட்பு துறை (JBPM) இயக்குநர் ஹசான் ‘அஸ்’ஆரி ஓமர் சம்பவத்தை உறுதிப்படுத்தி, இதுவரை எந்த உயிர்ச் சேதமும் பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும், மீட்பு பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.செந்துல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) தலைவர், துணை தீயணைப்பு மேலாளர் II மொஹ்த் ஹபிசான்,அவர்கள் காலை 6.41 மணிக்கு அவசர அழைப்பை பெற்றதாகவும், உடனடியாக குழுவை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
“கோலாலம்பூர் இயக்க மையம், துன் ரசாக் மற்றும் ஹாங் துவா BBP நிலையங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மொத்தம் 35 பணியாளர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியது,” என அவர் கூறினார்.
அவரது தகவலின்படி, தீ கட்டிடத்தின் 57-வது தளத்தில் உள்ள உணவகத்தின் சுமார் 30 சதவீத பகுதியை பாதித்தது. “தீ காலை 7.04 மணிக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 8.45 மணிக்கு முற்றிலும் அணைக்கப்பட்டது. எந்த உயிர்ச் சேதமும் இல்லை. தற்போது கட்டிடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது,” என அவர் மேலும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, தீயணைப்புப் பணியாளர்கள் தீயணைப்பு லிப்ட் வழியாக கட்டிடத்துக்குள் சென்று, ‘வெட் ரைசர்’ (Wet Riser) அமைப்பு மூலம் தீயை அணைத்தனர். இதற்கிடையில், KLCC Property Holdings Berhad (KLCCP) இன்று காலை 6.43 மணிக்கு தீ ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது.அது வெளியிட்ட அறிக்கையில், அதிகாரிகள் சம்பவத்திற்கான மேலதிக விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.




