ஷா ஆலாம், அக் 28: சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (JPJ) நடத்திய “ஒப் பெராங் லெபே முவாத்தான்” (Ops Perang Lebih Muatan) சோதனை நடவடிக்கையில், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 50 சதவீதத்திற்கும் அதிகமான சுமையை ஏற்றிச் சென்ற 19 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் அக்டோபர் 14 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நடவடிக்கை காலத்தில் மொத்தம் 29,089 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் நோக்கம் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவது ஆகும்.
“கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் சட்டத்தினை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக, எங்கள் அதிகாரிகள் தினசரி இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்,” என்று அவர் NSTயிடம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தண்டனை அளிப்பதற்காக அல்ல, மாறாக லாரி ஓட்டுநர்கள் உட்பட அனைத்து சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகும் என அஸ்ரின் கூறினார்.
“இந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு சாலைப் பயணியையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. எனவே, அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நடவடிக்கை காலத்தில் மொத்தம் 14,078 சம்மன்கள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




